May 03, 2006

இளைஞனின் மனசாட்சி

மே தின விழா கொண்டாட்டத்தில் நானும், என் நண்பர்கள் சிலரும் கலந்து கொண்டோம். இந்த முறை மே தினத்தில் துபாய் ராஜேந்திரன் - புதியதாக இரண்டு இளைஞர்களை கூட்டி வந்திருந்தான். இது இந்த வருட மே தினத்தில் எங்களுக்கு கிடைத்த புது வரவு என்று எண்ணிக் கொண்டோம்.மே தின பேரணி முடித்துவிட்டு, களைப்பில் டீ கடை முன் கொட்டி வைத்திருந்த மணலில் நாங்கள் உட்கார்ந்தோம். ஆளுக்கு ஒரு டீ, பி°கட்டை சாப்பிட்டு விட்டு, அரசியல் பற்றி கதைக்க ஆரம்பித்தோம். இந்த அரசியல் விவாதத்தில் ஆர்வம் செலுத்திய புதிய நண்பர்கள் (இவர்கள் முதன் முதலாக ஓட்டுப் போடப்போகிறவர்கள்) அம்மா குறித்தும், அய்யா குறித்தும் பல கேள்விகளை கேட்டனர். அதில் முக்கியமானது. அம்மா 35 லட்சம் பேருக்கு வேலை தருகிறேன் என்கிறார். அய்யா 5 லட்சம் பேருக்கு வேலை தருகிறேன் என்கிறார். எங்களுக்கு வேலை கிடைக்குமா? இதுதான் கேள்வி!

உண்மையில் இது எங்களுக்கு தர்ம சங்கடமான கேள்விதான்! ஏனென்றால் ஆட்சியாளர்கள்தான் இதற்கு உறுதியளிக்க முடியும். என்னால் முடியாது. அப்புறம் என்ன? இரண்டு கட்சிகளையும் வண்டவாளம் ஏற்றியதுதான் மிச்சம். உண்மையை போட்டு உடைத்து விட்டோம். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை.

எல்லாம் தேர்தல் கோஷம் தானப்பா? அரிசி, தங்கம், வேலை, நிலம் எல்லாம் அரசியல் கோஷமே... இதுவெல்லாம் அமலாக்குவதற்கான கொள்கை அவர்களிடம் இல்லை என்று கூறி. இதற்கு தேவை இவரா, அவரா என்று சிந்திக்காமல் - கொள்ளை ரீதியாக முடிவுவெடுக்கும் ஆட்சிகள் நம்மிடம் வரவேண்டும் என்று கூறிவிட்டு, வழக்கம் போல் உருக்குலையா வங்கம் குறித்தும், கேரள நிலச் சீர்திருத்தம் குறித்தும் உரையாடி அவர்களுக்கு எதிர்கால நம்பிக்கையூட்டினோம்.

இதற்குள் திரும்பவும் அவர்களுக்கு ஒரு சந்தேகம். விஜயகாந்த் சொல்றாரு, இரண்டுப் பேரையும் பாத்துட்டோம்; எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு, அதனால அவருக்கு ஓட்டுப் போடலாமே! என்று மீண்டும் அந்த புதிய முகங்கள் கேட்க! அரசியலுக்கும் - விஜயகாந்த்துக்கும் உள்ள தொடர்பையும், அவருக்கு மக்கள் மீது ஏற்பட்ட திடீர் கரிசனத்தையும், இதுவும் ஒரு சினிமா என்று விரிவாக விளக்கினோம்.
குழம்பிப்போன அவர்கள் நாங்க யாருக்குத்தான் ஓட்டுப் போடுறது என்று கேட்க!மீண்டும், விஷயத்தை வேறு கோணத்தில் விளக்கி, முதலில் தமிழகத்தில் ஜனநாயகம் வேணும், அது சட்டமன்ற ஜனநாயகம் தொடங்கி கூட்டம் கூடும் - போராடும் ஜனநாயகம் - பத்திரிகை ஜனநாயகம் வரை தேவைப்படுகிறது. இதையெல்லாம் அம்மாவிடும் எதிர்பார்க்க முடியாது. அந்த விதத்தில் ஐய்யவே தேவலை என்று சொல்லி அவர்களை டி.பி.ஏ.வுக்கு ஓட்டுப் போட சம்மதிக்க வைத்து விட்டோம். (இதுதான் புரட்சியா? என்று கேட்டு விடாதீர்கள்-அது வேற இடத்தில் விவாதிக்க வேண்டிய விஷயம்)

இருந்தாலும், அவர்கள் வேலை குறித்து திரும்ப - திரும்ப கேட்டது, இந்த ஆட்சியாளர்களின் செவிட்டுக் காதுகளுக்கும் - வறண்ட மூளைகளுக்கும் உரைக்குமா? எனத் தெரியவில்லை.அண்ணா சொல்லியிருக்கிறார். வேலையில்லாதவனின் மூளை சாத்தானைப் போன்றது என்று. திராவிடங்கள் அண்ணாவின் பெயரை மூச்சு முப்பது தடவை உச்சரித்தாலும், வேலைவாய்ப்பை உருவாக்கும் கொள்கை விஷயத்தில் அவர்களது கவனம் சென்றதே இல்லை. இது இருவருக்கும் பொருந்தும்.

இறுதியாக அவங்க வேலை தரலைன்னா நாமெல்லாம் சேந்து போராடலாம்னு நம்பிக்கையூட்டி முடித்தோம்!

10 comments:

PARAMAN said...

நண்பரே,

// உருக்குலையா வங்கம் குறித்தும், கேரள நிலச் சீர்திருத்தம் குறித்தும் உரையாடி //

உருக்குலையா என்றால் கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லாத என்றுதான் அர்த்தமா?.


பரமன்.

சந்திப்பு said...

பாமரன் நான் காமாலைக் கண்ணன் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதுதான் பாமரன்கள் பச்சோந்தி வேடமிட்டிருப்பதையும் அறிந்து கொள்கிறேன். நன்றி!

இரா.சுகுமாரன் said...

ஏதோ ஒரு சமரச அரசியல் பேசி முடிச்சிட்டீங்க. அப்பறம் ஐந்து வருடம் கழித்து பார்ப்போம், அப்படின்னு சொல்லிடலாம். அவங்க உறுதியா செய்யப்போரதில்ல. - இது கடந்த கால படிப்பினையிலிருந்து.

சந்திப்பு said...

சுகுமாறன் நீங்க சொல்றது சரிதான்! வேற என்னத்த செய்ய முடியும் நம்மால...

Muthu said...

புரட்சி சம்பந்தமாக இளைஞர்களையும் குழப்ப ஆரம்பிச்சுட்டீங்களா? :))

இல்லைங்க..சும்மா..நாம் போகவேண்டிய தூரம் அதிகம்

சந்திப்பு said...

ஆம் முத்து! தமிழகத்தில்
புரட்சி தலைவர்
புரட்சி தலைவர்
புரட்சி புயல்
புரட்சி நடிகர்
என... எல்லாம் புரட்சிகரமாய் காட்சியளிக்கும் போது இளைஞர்கள் குழம்புவது இயற்கையே!

Muthu said...

//புரட்சி தலைவர்
புரட்சி தலைவர்
புரட்சி புயல்
புரட்சி நடிகர்//

:)))

புரட்சிதலைவியை உள்நோக்கத்தோடு குறிப்பிடாமல் விட்டது ஏன்?

சந்திப்பு said...

முத்து சத்தியமா சொல்றேன் எந்த உள்நோக்கமும் இல்லை. தலைவி என்பதற்கு பதிலாக தலைவர் இடம் பெற்று விட்டார். இவரும் அதிமுக தலைவர்தானே....!

பரங்கியன் said...

// நாமெல்லாம் சேந்து போராடலாம்னு நம்பிக்கையூட்டி முடித்தோம்!//


இப்படி இன்னும் எவ்வளவு காலத்திற்குதான் நம்பிக்கையா இருக்குறது தலைவா?

சந்திப்பு said...


இப்படி இன்னும் எவ்வளவு காலத்திற்குதான் நம்பிக்கையா இருக்குறது தலைவா?

பரங்கியன் நம்ம இந்திய நாடு பழம் பெரும் நாடு. பழமையான சிந்தனைகளையும் கொண்டுள்ள நாடு. நேரடி எதிரியாக இருந்த வெள்ளைக்காரனை விரட்டவே 250 வருடம் ஆச்சு! இப்ப உள்நாட்டு முகமூடி கொள்ளையர்களை மக்களிடம் அடையாளம் காட்டவே சிரமப்பட வேண்டியிருக்கிறது. இதுபோன்ற காலங்களில் புரட்சிவாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து லெனின் மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்,
அதாவது, புரட்சிகர பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். பொறுமையிலும் புரட்சிகர பொறுமை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
எனவே, மக்களை விழிப்புணர்வு அடையச் செய்வதே இன்றைய தேவை. மாறாக சில குழுக்கள், மக்களிடம் இருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு நாளைக்கே புரட்சியை கொண்டு வந்து விடுவோம் என்பதுபோல் செயல்படுகின்றனர். இவர்களது தத்துவமும் இன்றைக்கு பயங்கரவாதிகளோடு ஒத்துப்போகக்கூடியதாக மாறிவிட்டது.
நன்றி பரங்கியன்.